110 கோடி பெறுமதியான போதைப்பொருளுடன் 22 தேரர்கள் கைது!
110 கோடி பெறுமதியான போதைப்பொருளுடன் 22 தேரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாய்லாந்தின் பாங்கொக் நகரிலிருந்து நேற்று சனிக்கிழமை இரவு வருகை தந்த 22 இளம் தேரர்களைக் கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் சோதனையிட்டனர்.
இதன்போது, அவர்கள் கொண்டு வந்த பயணப் பொதிகளில் பாடசாலை உபகரணங்கள் மற்றும் இனிப்புப் பண்டங்களுக்கு நடுவே மிகச் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 110 கிலோகிராம் எடையுடைய குஷ் மற்றும் ஹஷிஷ் ரக போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
கைப்பற்றப்பட்ட இந்தப் போதைப்பொருட்களின் சர்வதேசச் சந்தை பெறுமதி 110 கோடி ரூபாவுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட தேரர்கள் இலங்கையின் பல்வேறு உயர் கல்வி நிறுவனங்களில் பயின்று வருபவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த 22-ஆம் திகதி தர்மகர்த்தா ஒருவரின் செலவில் தாய்லாந்து சென்ற இவர்கள், அங்கு சாதாரண உடையில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த புகைப்படங்கள் அவர்களின் கைபேசிகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.
கட்டுநாயக்க விமான நிலைய வரலாற்றிலேயே இத்தனை அதிகமான தேரர்கள், இவ்வளவு பாரிய போதைப்பொருள் தொகையுடன் கைது செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும். சந்தேகநபர்கள் இன்று நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.





