பதுளை மண்சரிவுத் துயரம்: 11 நாட்களாகியும் ஒரே மகளைத் தேடும் தாய்!
பதுளை மாவட்டம், கந்தக்கெட்டிய பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாகொல்ல கிராமத்தில் கடந்த மாதம் 27ஆம் திகதி இடம்பெற்ற பாரிய மண் சரிவில் காணாமல் போன தனது ஒரே மகளை, தாய் ஒருவர் கண்ணீருடன் தொடர்ந்து தேடி வருகிறார்.
காயத்ரி காவிந்தி ராஜபக்ஷ என்ற 21 வயதான யுவதி, மண் சரிவில் சிக்கி 11 நாட்களாகியும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
அந்த கிராமத்தில் மண் சரிவில் சிக்கி மொத்தம் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். காணாமல் போன காயத்ரியின் உறவினர்கள் மூவரும் இதில் அடங்குவர்.
மண் சரிவு ஏற்பட்டவேளை, மகளின் கையைப் பிடித்துக்கொண்டு ஓட முயற்சித்தபோது, மகள் தோட்டப் பக்கம் பாய்ந்ததாகவும், அப்போது மகள் கை நழுவியதாகவும், இருவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் தாய் தெரிவித்தார்.
அவரது மகன் அருகில் உள்ள வயலில் இருந்து ஓடிவந்து தாயைக் காப்பாற்றியபோதும், மகளைக் காப்பாற்ற முடியவில்லை. “என் மகள் இந்த மண்மேட்டிற்குள் இரண்டடி அல்லது மூன்றடி ஆழத்தில் எங்கோ இருக்கிறார் என உறுதியாக நம்புகிறேன். தினமும் 20, 30 தடவைகள் வந்து தேடுகிறேன்,” எனத் தாயார் உருக்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் போன மகள் மிகத் திறமையானவர் எனவும், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்குச் செல்லவிருந்ததாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.





