அரச பேருந்து பயணிகளுக்குக் காத்திருக்கும் பெறுமதியான பரிசுகள்! பயணச்சீட்டுகளைப் பத்திரப்படுத்துமாறு கோரிக்கை
இந்தப் புத்தாண்டு விடுமுறை காலத்தில் இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB) வெறும் 6 நாட்களில் 1 பில்லியன் ரூபாய், அதாவது 100 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி சாதனை படைத்துள்ளது.
கடந்த ஏப்ரல் 9 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அரச பேருந்துகளில் பயணித்த பயணிகளுடன் இந்த லாபத்தைப் பகிர்ந்து கொள்ள போக்குவரத்துச் சபை தீர்மானித்துள்ளது.
இதன்படி, இந்தப் நாட்களில் பயணித்த பயணிகளுக்கிடையே ஒரு சிறப்பு குலுக்கல் நடத்தப்பட்டு பெறுமதியான பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
இந்தப் பரிசுப் போட்டியில் கலந்துகொள்ள பயணிகள் தங்கள் பயணத்தின் போது பெற்ற பேருந்து பயணச்சீட்டுகளை மிகவும் பத்திரமாக வைத்திருக்குமாறு இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் சஜீவ நந்தன கனகரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.
பயணச்சீட்டின் இலக்கங்களை அடிப்படையாகக் கொண்டே இந்தக் குலுக்கல் முறை அமையவுள்ளது.
பொதுமக்களின் பேராதரவால் கிடைத்துள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வருமானத்தை மீண்டும் மக்களுக்கே பயனுள்ள வகையில் வழங்க முன்வந்துள்ள இ.போ.ச-வின் இந்த முயற்சி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.





