விரிவுரையாளர் தயாளினி கொலை வழக்கில் மகள் மற்றும் மருமகனின் விளக்கமறியல் நீடிப்பு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சித்த மருத்துவத் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் தயாளினி திலீபன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள அவரது 19 வயதுடைய மகள் மற்றும் 21 வயதுடைய மருமகன் ஆகியோரை எதிர்வரும் மே மாதம் 14-ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேற்று இந்த வழக்கு நீதிவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கடந்த மார்ச் 18-ஆம் திகதி பாண்டியன் தாழ்வுப் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் வைத்து விரிவுரையாளர் படுகொலை செய்யப்பட்டார்.
அவரது சடலம் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற எல்லைக்குள் மீட்கப்பட்டதால், அது தொடர்பான மரண விசாரணை அறிக்கை இன்னும் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்பது நேற்று சுட்டிக்காட்டப்பட்டது.
திருகோணமலையில் வைத்துப் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அடுத்த விசாரணை மே 14-ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.




