இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை! – 36 மணிநேரத்திற்கு நீடிக்கும் ஆபத்து!
இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து அதே இடத்தில் நீடிப்பதால், வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை 9.30 மணிக்கு அதிரடிச் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை பொருந்தும். குறிப்பாக, சில இடங்களில் 150 மில்லிமீற்றர் வரை மிக பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு நகருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 36 மணித்தியாலங்களுக்குள் இலங்கையை விட்டு விலகிச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதுவரை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கங்களில் இருந்து தற்காத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





