சங்கீத்சனின் எதிர்காலக் கலைப் பயணத்திற்குத் தனது வாழ்த்துகளை தெரிவித்த நாமல்
விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையிலான உள்ளடக்கங்களைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தமிழ் சொல்லிசைப் பாடகர் சங்கீத்சன் ப*யங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அவர் நீதிமன்றத்தால் அண்மையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டதை அடுத்து, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அதனை வரவேற்றுள்ளார்.
இது குறித்துத் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் (X) சமூக வலைத்தளக் கணக்கில் பதிவிட்டுள்ள நாமல், “இந்த முடிவுக்குப் பின்னால் உள்ள அரசியல் குறித்து நான் கருத்து தெரிவிக்கப் போவதில்லை; இளம் கலைஞர் சங்கீத்சன் விடுதலை செய்யப்பட்டு, அவரது குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்துள்ளார் என்பதுதான் இங்கு முக்கியமானது; அது நடந்ததைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனது பதிவில், “இந்த இளம் கலைஞர் தனது தனித்துவமான திறமையையும், எதிர்கால அபிலாஷைகளையும் நேர்மறையான மற்றும் அர்த்தமுள்ள வழியில் தொடர்ந்து முன்னெடுப்பார் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ச, பாடகரின் எதிர்காலக் கலைப் பயணத்திற்குத் தனது வாழ்த்துகளையும் பகிர்ந்துள்ளார்.





