ஞாயிற்றுக்கிழமை கடலில் கறுப்புக்கொடி போராட்டம் – மீனவ அமைப்புக்கள் அழைப்பு
இந்தியா மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து கறுப்புக்கொடி போராட்டம் எதிர்வரும் மூன்றாம் திகதி ஞாயிற்றுக்கிழமை, யாழ்ப்பாண மாவட்ட கடற்பகுதிகளில் இடம் பெறும் என யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் ஸ்ரீ கந்தவேள் புனிதப் பிரகாஷ் தெரிவித்தார்.
இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சமாசத்தில் இடம் பெற்று ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் இந்தியா எல்லை தாண்டிய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து கடலில் கறுப்புக்கொடிகளைத் தாங்கி நமது துக்கத்தை வெளிப்படுத்தவுள்ளோம்.
இந்திய மீனவர்களினால் யாழ் மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரமும் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு வருகின்ற நிலையில் எமது பிரச்சனை தொடர்பில் இந்திய அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் தெரியப்படுத்தியுள்ளோம்.
ஆனால் இந்தியாவில் உள்ள சில அரசியல்வாதிகள் இந்திய மீனவர்களின் எல்லை தாண்டுவதை நியாயப்படுத்தும் நோக்கில் கருத்து வெளியிடுவது மனவேதனையை தருகிறது.
நாம் எமது கடலில் மீன் பிடிப்பதற்கு இந்திய அரசாங்கத்தை கேட்க வேண்டிய தேவை இல்லை அத்தோடு எமது கடலிலேயே இந்தியா மீனவர்களுக்கு தாரைவாத்துக் கொடுக்கவும் முடியாது.
எல்லை தாண்டி மீன்படியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் சிலர் இலங்கை சிறையில் உள்ள நிலையில் அவர்களை விடுவிக்குமாறு இந்திய அரசு அழுத்தம் வழங்கி வருகிறது.
இதனை நாம் வன்மையாக கண்டிக்கிறோம் எமது கடல் இறமை எமக்கே சொந்தம் கடலை யாருக்கும் தாரை வார்க்க முடியாது.
ஆகவே இதனை வலியுறுத்தி கடலில் கறுப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்துவதோடு நமது போராட்டம் இலங்கை கடல் எல்லை வரை தொடர உள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.