17 ஆண்டுகளாகியும் தீர்வில்லை! – முள்ளிவாய்க்கால் அவலம் குறித்து நடிகர் நிழல்கள் ரவி கண்ணீர் அறிக்கை!
ஈழ மண்ணில் யுத்தம் முடிவடைந்து 17 ஆண்டுகள் கடந்தும், முள்ளிவாய்க்காலில் கொன்றழிக்கப்பட்ட எமது தமிழ் உறவுகளுக்கு இதுவரை சர்வதேச நீதி கிடைக்கவில்லை என நடிகர் நிழல்கள் ரவி மிகுந்த கவலை வெளியிட்டுள்ளார்.
“சிங்கள அரசின் அடக்குமுறைக்கு எதிராகத் தமிழ் இனம் தனது உரிமைக்காக 30 ஆண்டுகள் ஆயுதம் ஏந்திப் போராடியது.
கடந்த 2009 மே 18 அன்று சர்வதேச நாடுகளின் கூட்டுப் பங்களிப்புடன் அந்தப் போராட்டம் மௌனிக்கப்பட்டது” என அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்து பேசிய நிழல்கள் ரவி, “இந்தக் கொடூர யுத்தத்தில் இலட்சக்கணக்கான உயிர்கள் பலியாகின; அடுக்கடுக்கான போர்க்குற்றங்கள் அரங்கேறின.
ஆனால் 17 வருடங்களாகியும் பாதிக்கப்பட்ட இனம் இன்னும் நாதியற்று, நடுத்தெருவில் நின்று நலிவடைந்த வண்ணமே உள்ளது.
தயவுசெய்து தமிழ் இனத்தை வாழ விடுங்கள். முள்ளிவாய்க்கால் மண்ணில் விதைக்கப்பட்ட எமது தொப்புள்கொடி உறவுகளின் ஆன்மாக்கள் சாந்தியடைய சர்வதேச நீதி வேண்டும். என்றும் ஈழத்தமிழர்களின் நிழலாக இந்த நிழல்கள் ரவி இருப்பார்” என உருகியுள்ளார்.





