இலங்கையில் உள்ள இரண்டு பாரிய அளவிலான கோதுமை மா உற்பத்தி நிறுவனங்களுக்கு இடையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலில், ஒரு மாதத்திற்கு தேவையான கோதுமை மா உற்பத்திக்கு தேவையான கையிருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ மற்றும் அகில இலங்கை பேக்கரி சங்கத்தினருக்கு இடையில் இன்று (05) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்ட விடயங்களை வெளிப்படுத்தியதாக குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, துருக்கி மற்றும் டுபாயில் இருந்து ஆர்டர் செய்யப்பட்ட கோதுமை மாவின் கையிருப்பு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதிக்குள் இந்த நாட்டிற்கு பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
எனவே எதிர்காலத்தில் சந்தையில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் அமைச்சர் கூறுகிறார்.
கோதுமை மாவுக்கான கட்டுப்பாட்டு விலையை தற்போது விதிப்பது நடைமுறைச் சாத்தியமற்றது எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
இங்கு உரையாற்றிய அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன, சிறிய அளவிலான பேக்கரி உற்பத்தியாளர்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.
மிக வேகமாக அதிகரித்து வரும் முட்டை விலையை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்தமைக்கான பெருமை அமைச்சருக்கு உரியது என்றும் என்.கே.ஜயவர்தன கூறுகிறார்.
வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள முழு கடிதம் கீழே உள்ளது