பாடகி தீயின் ‘வாரி வாரி’ பாடல் வெளியீடு – சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட முன்னணி கலைஞர்கள் பங்கேற்பு
சர்வதேசப் புகழ்பெற்ற ஈழத்துப் பாடகி தீயின் புதிய தனிப்பாடலான “வாரி வாரி” (Vary Vary) வெளியீட்டு விழா, இன்று (வெள்ளிக்கிழமை) கொழும்பிலுள்ள சினமன் லைப் நட்சத்திர விடுதியில் மிக விமரிசையாக நடைபெற்றது.
இலங்கை மற்றும் இந்தியக் கலைஞர்களுக்கிடையிலான கலைத்துவப் பாலமாக அமைந்த இந்நிகழ்வில், பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் பாடலாசிரியர் விவேக் ஆகியோர் கலந்துகொண்டு விழாவிற்குப் பெருமை சேர்த்தனர்.
“என்ஜாய் எஞ்சாமி” பாடலின் உலகளாவிய வெற்றிக்குப் பிறகு, தீயின் தனித்துவமான குரலில் வெளியாகியுள்ள இந்தப் புதிய படைப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த பிரம்மாண்ட நிகழ்வில் கௌரவ விருந்தினர்களாகப் பிரதி அமைச்சர் பொறியியலாளர் ஜனித்த ருவன் கொடித்துவக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மற்றும் இந்திய துணை உயர்ஸ்தானிகர் ஆகியோர் பங்கேற்றனர்.
இவர்களுடன் இலங்கையின் பல்துறை சார்ந்த கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் திரளாகக் கலந்துகொண்டு பாடகி தீயின் புதிய முயற்சியைப் பாராட்டி வாழ்த்தினர்.
தென்னிந்திய மற்றும் இலங்கை கலைஞர்களுக்கிடையிலான கலாசார உறவை வலுப்படுத்தும் மைல்கல்லாக இந்த விழா கொழும்பின் கலை வரலாற்றில் பதிவாகியுள்ளது.




