இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு, தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு இன்றியமையாதது, என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தி ஹிந்து நாளிதழுக்கு அளித்துள்ள செவ்வியில் அவர், “தீர்க்கப்படாத இனப் பிரச்சினை சுதந்திரத்திற்குப் பின்னர் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இலங்கை தலைமைகள் பல வரலாற்று வாய்ப்புகளை தவற விட்டதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.
இன மோதல்களை அனுமதித்து, நாட்டை நீடித்த உள்நாட்டுப் போருக்குள் தள்ளியதாகவும், தமிழ் மக்களின் நிறைவேற்றப்படாத கோரிக்கைகளும், ஊழல், தவறான நிர்வாகம் போன்றன நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை சீர்குலைத்துள்ளன என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
நாட்டின் மோசமான பொருளாதார நெருக்கடிக்கும் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள அரசியல் பிரச்சினைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“தீர்க்கப்படாத தமிழர் பிரச்சினை சுமார் 30 வருடங்கள் நீடித்த போருக்கு களமாக இருந்தது.
அதற்காக பெரும் தொகை செலவிடப்பட்டது. போர் இல்லையென்றால் நாட்டின் பொருளாதாரம் இந்த நிலைக்கு வந்திருக்காது.
எங்கள் முரண்பாடுகள் தீர்க்கப்படாமல், எமது பொருளாதாரம் மேம்படும் என்று நான் நினைக்கவில்லை.
உள்நாட்டுப் போர் 2009 இல் முடிவடைந்திருக்கலாம், ஆனால் அதற்கு வழிவகுத்த மோதல் தீர்க்கப்படாமல் உள்ளது.
இத்தனை ஆண்டுகளில் போர் ஏற்படுவதற்கான காரணம் தீர்க்கப்படவில்லை.
தமிழர்கள் பாரம்பரியமாக வாழும் பிரதேசங்களில் சிங்களக் குடும்பங்களைக் குடியேற்றுவதன் மூலம் வடக்கு, கிழக்கின் சனத்தொகையை இலங்கை அரசு மாற்றியமைத்துள்ளது. இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
இதனால் தமிழர்கள் நலிவடைந்து வருகின்றனர்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.