முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில், தமிழினப் படுகொலையின் 13 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுக்கான பிரமாண்டமான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எனவே, அச்சமின்றி அனைவரையும் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறும் வடக்கு, கிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 13ஆம் ஆண்டு நிறைவடைகின்றன.
இதனை முன்னிட்டு, முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இன்று உணர்வெழுச்சியுடன் இடம்பெறவுள்ளது.
முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவுச்சின்னத்தில், இன்று முற்பகல் 10.30 மணியளவில் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, அஞ்சலி செலுத்தப்படும்.
இதற்கான ஏற்பாடுகள் கடந்த இரண்டு நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வடக்கு, கிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் இணைத் தலைவர்களில் ஒருவரான அருட்பணி லியோ அடிகளார் மற்றும் பொதுமக்கள் இணைந்து, நேற்று முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அகவணக்கம் செலுத்தி, நினைவேந்தல் ஏற்பாட்டு வேலைகளையும் சிரமதான பணிகளையும் முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வளாகத்துக்குள் இராணுவ காவலரண் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
நினைவேந்தல் செய்ய எந்தத் தடையும் இல்லை என பிரதமர் தெரிவித்தாலும் நினைவேந்தல் வளாகத்துக்குள் இராணுவ காவலரண் அமைக்கப்பட்டமைக்கு உறவுகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
நினைவேந்தல் வளாகத்தை சூழ பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், நினைவேந்தல் நிகழ்வு அமைதியாகவும், எழுச்சியுடனும் முன்னெடுக்கப்படும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.