இன்றைய வானிலை: பல இடங்களில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை !
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுடன், திருகோணமலை மாவட்டத்திலும் பல இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (23) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அறிக்கையின் படி, தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களில் 50 மி.மீ. வரை கனமழை பெய்யக்கூடும் என்றும், ஊவா, அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா, ஹம்பாந்தோட்டை, மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகள், வடக்கின் சில பகுதிகள், வடமேற்கு, கிழக்கு மாகாணங்களிலும், மாத்தளை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் 30-40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சப்ரகமுவ, மேற்கு மாகாணங்கள் மற்றும் காலி மாவட்டத்தின் சில பகுதிகளிலும் காலை வேளையில் மூடுபனியுடன் கூடிய வானிலை காணப்படலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும்போது, மின்னல் தாக்கம் மற்றும் பலத்த காற்றினால் ஏற்படும் சேதங்களைத் தவிர்க்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.