கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு கடத்திச் செல்லப்படவிருந்த 6 கிலோ தங்கத்தை பயங்கரவாத தடுப்பு பொலிஸார் நேற்று கைப்பற்றியுள்ளனர்.
அத்துடன், கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு தங்கத்தை பேருந்தில் எடுத்துச் சென்ற நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
தகவல் ஒன்றின் அடிப்படையில், ஆமர் வீதியில் வைத்து, இந்த தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட தங்கத்தின் பெறுமதி 120 மில்லியன் ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரிடம் இருந்தே தங்கம் கைப்பற்றப்பட்டதாகவும், அவரே கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளார்.
டுபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட தங்கம் யாழ்ப்பாணத்திலிருந்து படகு மூலம், இந்தியாவுக்கு கடத்திச் செல்லப்படுவதற்கு திட்டமிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.