உள்ளூர் நுகர்வோருக்கு குறைந்த விலையில் எரிவாயுவை வழங்க புதிய விநியோகஸ்தர்களை தேர்ந்தெடுத்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
தாய்லாந்தின் சியாம் எரிவாயு நிறுவனம் புதிய விநியோகஸ்தராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு வருடமாக எரிவாயு இறக்குமதி செய்த நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட எரிவாயு விலையை விட , மெட்ரிக் தொன் ஒன்றுக்கு 9 அமெரிக்க டொலர்கள் குறைவாக அந்த நிறுவனத்திடம் இருந்து எரிவாயுவை பெற்றுக்கொள்ள முடியுமென அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களாக ஓமானிய நிறுவனமொன்றினால் இலங்கைக்கு எரிவாயு இறக்குமதி செய்யப்பட்டது.அதன் ஒப்பந்தம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது.அதன்படி, அடுத்த மாதம் முதல் 2 ஆண்டுகளுக்கு இலங்கைக்கு எரிவாயுவை இறக்குமதி செய்ய புதிய நிறுவனத்தை தேர்வு செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஓமான் நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி இலங்கைக்கு அனுப்பப்பட்ட கடைசி எரிவாயு கப்பல் நேற்று இலங்கை வந்தடைந்தது.அதிலிருந்து 3,500 மெட்ரிக் டன் எரிவாயு தரையிறங்கிய பின்னர், விநியோக நடவடிக்கைகள் ஆரம்பமாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், நாடளாவிய ரீதியில் நிலவும் எரிவாயு தட்டுப்பாடு முற்றாக நீங்குவதற்கு இன்னும் ஒரு மாதம் ஆகும் என லிட்ரோ நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
எரிவாயு விநியோகம் மீள ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாடளாவிய ரீதியில் உள்ள எரிவாயு விற்பனை நிலையங்களுக்கு அதிகளவான நுகர்வோர் குவிந்து வருவதை அவதானிக்க முடிந்தது.எரிவாயுவின் விலை முன்னைய விலையை விட இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதால், நேற்று நாடளாவிய ரீதியில் எரிவாயு விற்பனை நிலையங்களுக்கு முன்பாக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர்.
இதேவேளை, நேற்று நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மண்ணெண்ணெய் கொள்வனவு செய்ய வந்தவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததுடன், சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மண்ணெண்ணெய் வழங்குவதற்கான டோக்கன் வழங்கும் முறையும் அமுல்படுத்தப்பட்டது.சில எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் அமைதியின்மை ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மண்ணெண்ணெய் தட்டுப்பாடு காரணமாக ஒருகொடவத்தை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டோக்கன் விநியோகம் நிறுத்தப்பட்டதால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டதுடன் பொலிஸார் தலையிட்டு நிலைமையை கட்டுப்படுத்தினர்.
இதேவேளை, பொது விடுமுறை தினமான மே 1 மற்றும் 3 ஆம் திகதிகளில் மின்வெட்டு இருக்காது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்று அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.