ரஷ்யா அதிபர் புதினுடன் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி சந்திப்பு
ரஷ்யாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதன்போது, ஈரான் மீதான ரஷ்யாவின் தொடர்ச்சியான ஆதரவிற்கு அவர் நன்றியைத் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமெரிக்காவின் ‘அதிகப்படியான கோரிக்கைகள்’ காரணமாகவே சமாதானப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததாகப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.
அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு எதிராக ஈரான் தனது போராட்டத்தைத் தொடரும் எனத் தெரிவித்த அராக்சி, இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாயக் கூட்டாண்மை இனிவரும் காலங்களில் மேலும் வலுப்படும் என்று ரஷ்ய அரசு ஊடகமான RIA விடம் உறுதிப்படத் தெரிவித்தார்.
உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், இந்த இரு நாடுகளின் நெருக்கம் சர்வதேச அரசியலில் மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.





