முல்லைத்தீவில் மாணவிகள் சிலரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவில் உள்ள பாடசாலையொன்றின் மாணவிகளை மாணவர்களுடன் காதல் வலையில் விழவைத்து, 6 மாணவர்கள் ஊடாக மாணவிகளின் நிர்வாண மற்றும் பாலியலில் ஈடுபடும் புகைப்படங்களை எடுத்து, அவற்றை மாணவிகளிடம் காண்பித்து அச்சுறுத்தி, பாலியல் துஸ்பிரயோகத்துக்கு ஆசிரியர் உட்படுத்தியுள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய 28 வயதான ஆசிரியருக்கு எதிரான வழக்கு, முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி சரவணராஜா முன்னிலையில் காணொளி தொழில்நுட்பம் ஊடாக நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக முல்லைத்தீவு பொலிஸார் ஆறு மாணவிகளிடம் பெற்ற வாக்குமூலத்தினை தொடர்ந்து ஆறு மாணவிகளும் சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அதில் இரண்டு மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த வழக்கின் சந்தேக நபரான ஆசிரியருக்கு எதிராக மேலும் இரண்டு வழக்குகளை முல்லைத்தீவு பொலிஸார் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த இரண்டு வழக்கின் விசாரணைக்காக, சந்தேக நபரை எதிர்வரும் 07 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் பணித்த நீதிவான், ஆசிரியரின் பாலியல் செயற்பாட்டுக்கு உதவிய குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மாணவனுக்கு பிணை வழங்கியுள்ளார்.
சந்தேக நபரான ஆசிரியருக்கு எதிரான முதல் வழக்கு, விசாரணைக்காக எதிர்வரும் 14 ஆம் திகதி நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது என முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.