பொங்கலுக்கான அரிசி இல்லை – போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்
அரிசி பற்றாக்குறையைத் தீர்க்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, அக்கரப்பத்தனை மற்றும் மன்றாசி நகரங்களில் வர்த்தகர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தை அக்கரப்பத்தனை மற்றும் மன்றாசி நகர வர்த்தகர்கள் ஏற்பாடு செய்தனர். இதில், நகர வர்த்தகர்களும் பொதுமக்களும் கலந்து, சுலோகங்களை ஏந்தி, எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், அரிசிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலைகள், அதனை நுகர்வோருக்கு சரியாக விற்பதற்கு தடையாகி, சிறு வர்த்தகர்கள் மிகுந்த பாதிப்பை எதிர்கொள்கின்றனர் என்று தெரிவித்தனர்.
இந்த ஆண்டு தைப்பொங்கலுக்கு, குறிப்பாக சிவப்பு அரிசி போன்ற அரிசி வகைகள் தேவையாக உள்ளன. ஆனால், தற்போது அரிசி பற்றாக்குறை உள்ளது. கட்டுப்பாட்டு விலைக்கு மட்டுமே அரிசி கிடைக்கின்றது, அதனை மீறினால் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள்.”
கொழும்பிலிருந்து இந்த பகுதிக்கு அரிசி கொண்டு வரும்போது போக்குவரத்து செலவுகள் மற்றும் சுமை தாங்கிகளின் கட்டணங்கள் அதிகமாகின்றன.
இதன் காரணமாக, கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டு, அரிசி பற்றாக்குறையை தீர்க்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.