குறைந்த வருமானம் பெறும் குடும்பத்திலுள்ள மாணவர்களுக்கு நிவாரண தொகை
அஸ்வெசும பயனாளர் குடும்பங்களில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கும், அஸ்வெசும கொடுப்பனவு பெறாத ஏழ்மை நிலைமையில் உள்ள குடும்பங்களின் மாணவர்களுக்கும் 6000 ரூபா நிவாரண தொகை வழங்கப்படும் என்று நிதி பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியபெரும தெரிவித்துள்ளார்.
அத்துடன், கல்வி அமைச்சின் மூலம் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் கூறினார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே பிரதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
பொருளாதார சூழ்நிலையில் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறி, பொருளாதார மீட்சிக்கான திட்டங்களுடன், கவனத்துக்குரிய தரப்பினருக்கு நிவாரணம் வழங்கும் திட்டங்களை விரிவுபடுத்திவருவதாக தெரிவித்தார்.
பிள்ளைகளின் கல்வி மீதான சுமையை குறைப்பதற்காக அரசாங்கம் சிறந்த தீர்மானங்களை எடுத்துள்ளதாகவும், இந்நிறுவனத்தின் கீழ் அஸ்வெசும பயனாளர்களின் குடும்பங்களின் பாடசாலை மாணவர்களுக்கு எதிர்வரும் பாடசாலை தவணையை முன்னிட்டு 6000 ரூபா வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் உள்ளடங்காத ஏழ்மை நிலைமையில் உள்ள குடும்பங்களின் பாடசாலை மாணவர்களுக்கும் 6000 ரூபா நிவாரண தொகை வழங்கப்படும்.
கடந்த காலங்களில் பாடசாலை மாணவர்களுக்கு பாதணி வழங்கும் முறையைப் போல, இந்த திட்டத்திலும் அதே நடைமுறைகள் பின்பற்றப்படும் என அவர் கூறினார்.