யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி: அது மக்களின் ஜனநாயக உரிமை! – அமைச்சர் பிமல் ரத்நாயக்க!
யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்துவது மக்களின் ஜனநாயக உரிமை எனப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் (Kilinochchi) இன்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 23, 2025) நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“அரசாங்கம் வருவதற்கு முன்பே மக்கள் இறந்தவர்களை நினைவு கூர்ந்தனர். அது அவர்களின் ஜனநாயக உரிமையாகவே காணப்பட்டது.”
“இறந்த தங்களுடைய உறவினர்களைச் சுதந்திரமாக நினைவுகூர முடியும். பாதுகாப்புப் படையினரும் அதற்குத் தடையாக இருக்க மாட்டார்கள்” என அவர் உறுதியளித்தார்.
“எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகின்றது” எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
இதேவேளை, உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கு உரிய உரிமை மக்களுக்கு உள்ளது. எனினும், “அந்த உரிமை என்பது விடுதலைப் புலிகளை நினைவு கூருவதற்கானது அல்ல” என அமைச்சர் முன்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





