இந்திர விழா காண தயாராகும் வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த 17-ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி வெகு விமர்சையாக நடைபெற்று வருகின்றது.
இதன் முக்கிய நிகழ்வான வேட்டைத் திருவிழா வியாழக்கிழமை (23) இரவு நடைபெற்றது. இதில் அம்பாள் வேட்டைக்குச் செல்லும் நிகழ்வை நினைவூட்டும் வகையில், பாயும் புலிகளின் உருவங்கள் வண்ண மின்விளக்குகளால் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு மின்னொளியில் ஜொலித்தன.
இந்த விசேட அலங்காரம் அங்கு குழுமியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களைப் பெரிதும் கவர்ந்ததுடன், தற்போது சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகின்றது.
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தின் இந்திரவிழா மற்றும் தீர்த்தத் திருவிழா எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி நடைபெறவுள்ளது.
கடல் நீரேரியில் நடைபெறும் தீர்த்தோற்சவத்தின் இரவு வேளையில் கொண்டாடப்படும் இந்திரவிழா, வல்வெட்டித்துறையின் பிரம்மாண்டமான கலாச்சார நிகழ்வாகக் கருதப்படுகிறது.
வல்வெட்டித்துறை பிரதேசம் வரலாற்று ரீதியாகப் பல முக்கியத்துவங்களைக் கொண்ட நிலையில், இந்தத் திருவிழாக் கோலங்கள் மக்களின் கலை மற்றும் பக்தி உணர்வை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன.





